தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
இவரின் வாரிசான ஆனந்த் பாபு தன்னுடைய 20 ஆவது வயதிலேயே ஹீரோவானார். அப்போது உச்சத்தில் இருந்த டி ராஜேந்தர் இயக்கிய டி ராஜேந்தர்’தங்கைக்கு ஒரு கீதம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் கவனம் பெற்ற நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக ‘பாடும் வானம்பாடி’ அமைந்தது.

இந்த படத்தில் அவர் ஒரு டிஸ்கோ டான்சர் வேடத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது டிஸ்கோ நடனக் காட்சிகள் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்தன. அவரின் நடனத்துக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
அவர் நடித்தவற்றில் உதயகீதம், இளமை, விசுவநாதன் வேலை வேணும், பார்த்த ஞாபகம் இல்லையோ, அர்த்தமுள்ள ஆசைகள், வீடு மனைவி மக்கள், புரியாத புதிர், புது புது ராகங்கள், புது வசந்தம், சிகரம், சேரன் பாண்டியன் ஆகியவை முக்கியமான படங்களாக அமைந்தன. இப்படி பிஸியான நடிகராக இருந்த ஆனந்த் பாபு 90 களின் இறுதியில் திடீரென்று காணாமல் போனார். அதற்குக் காரணம் அவருக்கு இருந்த அளவுக்கு மிஞ்சிய குடிப்பழக்கம்தான் என சொல்லப்பட்டது.

1999 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்தில் திரும்பி நடிக்கும் வரை 10 ஆண்டுகள் அவருக்கு சினிமாவில் ஒருவாய்ப்புக் கூட கிடைக்கவில்லை. குடியில் இருந்து மீண்ட அவர் அதன் பிறகு சில படங்களிலும் இப்போது சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
