கும்பமேளா எனப்படுவது இந்து சமயத்தில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கொண்டாடப்படுவது. யுனெஸ்கோவால் மிகப் பிரமாண்டமான திருவிழாவாக கும்பமேளா அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் அலகாபாத், ஹாரித்துவார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் ஆற்றுப்படுகையில் நடக்கும் திருவிழா தான் இந்த கும்பமேளா.

திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா பூர்ண கும்பமேளா எனப்படும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிக அளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.
இந்து மத சாஸ்திரப்படி சாகா வரம் தரக்கூடிய அமிர்தம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற பானையிலிருந்து அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் விழுந்தது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால் அந்த இடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக மற்றும் புற அழுக்குகளை நீக்கி பாவங்களை போக்கி புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
144 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பமேளா தற்போது இந்த வருடம் 13 ஜனவரியிலிருந்து நடைபெறுகிறது. இதில் ஒரு கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். சன்னியாசிகள், துறவிகள், சாமானிய மக்கள், ஆண்கள், பெண்கள், வேத பண்டிதர்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். இந்த மகா கும்பமேளா பண்டிகையின் போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிக மிக சிறப்பானதாகும். 13ஆம் தேதி தொடங்கப்பட்ட கும்பமேளா வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜனவரி 13ஆம் தேதி பௌர்ணமி ஸ்நானத்துடன் கும்பமேளா தொடங்கி இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதி மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29 இல் அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி மூன்றில் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரவரி 12 மஹி பௌர்ணமி ஸ்நானம், பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி ஸ்நானம் ஆகியவற்றுடன் மகா கும்பமேளா இந்த ஆண்டு நிறைவடைய உள்ளது. ஏற்கனவே ஒரு கோடி மக்கள் இந்த கும்பமேளாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த தினங்கள் நிறைவடைவதற்குள் 35 முதல் 40 கோடி வரையிலான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கடவுளை வேண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
