“1991-ல் 2 சீட்… 1996-ல் 173 சீட்”…. தமிழ்நாட்டை ஆளத் துடிக்கும் லாட்டரி குடும்பம்… மேடையில் வெடித்த ஆர்.எஸ்.பாரதி….!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் கூட்டணி மாற்றங்கள் மற்றும் தவெக அமைச்சரவை அமைந்த விவகாரம் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள், தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளன. இதன் காரணமாக திமுக தமிழக அரசியலில் தனித்துவிடப்பட்டுவிட்டதாகவும், மாநிலத்தில் விஜய் அலை வீசுவதாகவும் பரவலான பேச்சுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும், திமுகவின் எதிர்காலம் குறித்தும் தனது கருத்துக்களை அதிரடியாகப் பகிர்ந்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாக விளக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். “ஆட்சிக்கு நாங்கள் எந்த வகையிலும் இடையூறாக இருக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணியை விட்டுச் சென்றதற்காக யாரும் வருத்தப்படவில்லை. அதேபோல் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் எங்களுடன் தொடர்வதாகவே கூறின. ஆனால் தற்போது அவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பிடித்திருப்பது குறித்து, அவர்களின் நிலைப்பாட்டை அவர்கள்தான் விளக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், இத்தகைய சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் மக்களின் ஆதரவை ஒருபோதும் பெற முடியாது என்றும் அவர் சாடினார்.

   

திமுகவின் பலம் குறித்துப் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலும் ஒரு தனித்துவமான சூழலைக் கொண்டது என்றும், திமுகவின் வாக்கு வங்கியும் சித்தாந்த பலமும் எப்போதும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது என்றும் உறுதியாகத் தெரிவித்தார். “திமுக என்பது ஒரு வற்றாத ஜீவநதி; தேர்தலுக்கு முன்பு கூட இவ்வளவு பேர் எங்களை வந்து பார்க்கவில்லை, ஆனால் தற்போது அறிவாலயத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அவ்வப்போது சிலர் வந்து இளைப்பாறிச் செல்லும் நிழற்குடை அல்ல திமுக. எங்களுக்கு இதுபோன்ற அரசியல் அதிர்ச்சிகள் ஒன்றும் புதிதல்ல” என்று சுட்டிக்காட்டிய அவர், பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே திமுக தோல்வியைத் தழுவியுள்ளது என்றார்.

   

கடந்த கால அரசியல் வரலாற்றை நினைவுகூர்ந்த ஆர்.எஸ்.பாரதி, 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது, ஆனால் அடுத்த ஐந்தே ஆண்டுகளில், அதாவது 1996இல் 173 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். இறுதியாக, தற்போதைய அரசியல் சூழலைச் சாடிய அவர், “பெரியார், அண்ணா, காமராசர், ராஜாஜி, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் அரசியல் செய்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு, இன்று ஒரு லாட்டரி குடும்பத்தின் கையில் சிக்கியிருப்பது மற்றும் அவர்கள் தமிழ்நாட்டை ஆளத் துடிப்பது பெரும் வருத்தமளிக்கிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.