டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் மற்றும் மாணவர்கள் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜூலை 20 அன்று போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பேரணியைக் கலைத்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பையைச் சேர்ந்த அனுஜ் ராவத் என்பவர் நெகிழ்ச்சியான ஒரு காரியத்தைச் செய்துள்ளார். சுமார் 1,500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மும்பையில் இருந்தபடியே, டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்காக Zomato செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அந்த உணவு பார்சலின் குறிப்பில், “ஜந்தர் மந்தரில் பசியோடு இருக்கும் யாருக்காவது இந்த உணவை தயவுசெய்து கொடுத்துவிடவும்” என்று அவர் எழுதியிருந்தார். இதைப் பெற்ற Zomato டெலிவரி ஊழியர், அந்தப் போராட்டக் களத்தில் உள்ளவர்களிடம் குறிப்பைச் சத்தமாக வாசித்து உணவை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அனுஜ் ராவத்தின் இந்த மனிதநேயமிக்க செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
