மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் 20 வயது பழங்குடியின இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக 3 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் விலைக்கு வாங்கப்பட்ட அந்தப் பெண்ணை நாசிக்கைச் சேர்ந்த நபர் ஒருவர் மணம் முடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணை மதிக்காமல், கர்ப்பிணியாக இருந்த காலத்திலும் கூட கணவர் வீட்டார் உணவு வழங்காமல் மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்துள்ளனர்.
சாதி கொடுமைகளையும் கணவர் வீட்டாரின் அராஜகத்தையும் தாங்க முடியாமல் அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையைப் பறிக்க வந்த கணவர் வீட்டாரால் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் போலீசில் புகார் அளித்தபோதுதான், அந்தப் பெண் முறைப்படி திருமணம் செய்யப்படாமல் விலைக்கு வாங்கப்பட்டது தெரியவந்தது. தற்போது கணவர், மாமியார் மற்றும் இரண்டு இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
