அஜித்குமார் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. அதன் அடிப்படையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதில் ஆகாஷிற்கு கால் முறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பலத்த காயமடைந்த ஆகாஷ் முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
