மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி நாமே மருந்துகளை உட்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒரு அதிர்ச்சிகரமான மருத்துவச் சம்பவம் உணர்த்தியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் (ER) பணியாற்றும் மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலின்படி, வெறும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது உடலில் ஏற்பட்ட சிறிய பூஞ்சை தொற்றுக்காக (Fungal Infection), மருந்தகத்தில் நேரடியாக ‘புளூகோனசோல்’ (Fluconazole) 150 மி.கி மாத்திரையை வாங்கி உட்கொண்டுள்ளார். ஆனால், அந்த ஒரு மாத்திரை அவரது உடலில் ஏற்படுத்திய வினை மருத்துவர்களையே அதிச்சியில் ஆழ்த்தியது.
மாத்திரையை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அந்த இளைஞருக்கு இதயத் துடிப்பு தாறுமாறாக அதிகரித்து, நிமிடத்திற்கு 200 முறைக்கும் மேல் துடிக்கத் தொடங்கியுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ‘QT prolongation’ எனப்படும் ஆபத்தான இதய மின்சுற்று பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இது இதயத்தின் சீரான இயக்கத்தைப் பாதித்து, திடீர் இதய முடக்கம் அல்லது உயிரிழப்புக்குக் கூட வழிவகுக்கக்கூடிய ஒரு தீவிரமான நிலையாகும். அந்த இளைஞர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
இந்தச் சம்பவம் சுய மருத்துவத்தின் (Self-medication) விபரீதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. புளூகோனசோல் போன்ற சாதாரண மாத்திரைகள் கூட சிலருடைய மரபணு அமைப்பு அல்லது ஏற்கனவே இருக்கும் உடல் நிலையைப் பொறுத்து விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஒரு சிறிய தும்மல் அல்லது தோல் அரிப்பு என்றாலும், தகுதியான மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த மருந்தையும் உட்கொள்வது என்பது தற்கொலைக்குச் சமமானது. மருந்துகளை வாங்குவதற்கு முன்பு அது உங்கள் உடலுக்கு ஏற்குமா என்பதை ஒரு நிபுணரின் மூலம் உறுதி செய்வது மட்டுமே உங்கள் உயிரைக் காக்கும்.
