சென்னையில் பயங்கரம்: கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட இளைஞரை அம்மிக்கல்லால் அடித்துக்கொலை… கஞ்சா கும்பலின் வெறிச்செயல்..!!

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட விஷ்ணு (23) என்ற இளைஞர், போதை கும்பலால் அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தின் காரணமாக தண்டையார்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அப்போது, இக்கொலை வழக்கில் காவல்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட விஷ்ணுவின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

   

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இக்கொடூர கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.