தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ பெயரைக் குறிப்பிட்டு, தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் ஏற்றிச் சென்று அவர்கள் இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியில் கூறினால் தனது குழந்தையைக் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும், விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு தனக்குக் கிடைத்த தண்டனை இதுதானா என்றும் அவர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில் வருவது போல, தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குக் காரணமான அந்த இரண்டு நபர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் தவெகவினருக்கு எதிராகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
