உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த லவிகா குப்தா என்ற பெண், தனது கணவர் சன்யாம் ஜெயின் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவருக்கு அடர்த்தியான முடி இருப்பதாக நம்பி வந்த நிலையில், அவர் உண்மையில் சொட்டைத் தலையை மறைக்க ‘டோப்பா’ அணிந்து தன்னை ஏமாற்றியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, கணவரின் கல்வித் தகுதி மற்றும் வருமானம் குறித்த தகவல்களும் போலியானவை என்பது திருமணத்திற்குப் பிறகே தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்துக் கேள்வி கேட்டபோது, கணவர் தன்னை ஆபாசப் படங்கள் காட்டி மிரட்டியதுடன், போதைப் பொருட்களைக் கடத்தச் சொல்லி வற்புறுத்தி அடித்துத் துன்புறுத்தியதாகவும் லவிகா புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது நான்கு சகோதரிகளும் சேர்ந்து கொண்டு தன்னை வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
