கடந்த 2004ம் ஆண்டில் பருத்திவீரன் படம் எடுக்கப்பட்ட போது, படத்தின் தயாரிப்பாளராக துவக்கத்தில் இருந்தவர் ஞானவேல் ராஜா. இவர் நடிகர் சிவக்குமாரின் உறவினர். ஒரு மாதம் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், என்னிடம் பணம் இல்லை என, அவர் காணாமல் போய் விட்டார். ஆனால், கார்த்தியின் எதிர்காலம் கருதி, அந்த படத்தை கைவிடாமல் தன்னுடைய சொந்த பேனரில், பல பேரிடம் 50 ஆயிரம் முதல், ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கி கஷ்டப்பட்டு, படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் அமீர்.
பருத்தி வீரன் படத்தின் திட்டமிட்ட பட்ஜெட் ரூ. 2.75 கோடி, ஆனால் எடுத்து முடிக்கப்பட்ட போது ஆன செலவு, ரூ. 4.80 கோடி என்ற நிலையில், இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 45 கோடி என்று சொல்லப்படுகிறது. ஆனால், இயக்குநர் அமீரிடம் இருந்து படத்தை எழுதி வாங்கிக்கொண்ட ஞானவேல்ராஜா தரப்பு, அதற்கு பிறகு பணம் எதுவும் அமீருக்கு தரவில்லை. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில், ஞானவேல்ராஜா அமீரை தரக்குறைவாக பேசியது திரைத்துறையினர் மத்தியில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. இந்நிலையில், ஜப்பான் பட விழாவில் பேசிய கார்த்தி, பருத்தி வீரன் படம் எடுத்து முடிக்கப்பட்ட போது, படம் ரிலீஸ் ஆவதே பெரிய பிரச்னையாகி விட்டது. மூன்றுமுறை ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து அண்ணன் சூர்யா, மொத்த சேமிப்பு பணத்தையும் எனக்காக கொடுத்து படத்தை வெளியிட வைத்தார் என்று கூறியிருக்கிறார். இப்படி கார்த்தி, பொய் பேசுகிறாரே என்று அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.