சென்னை தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரத்தில் அமர்ந்து சிறுமி ஒருவர் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. அந்தச் சிறுமியின் தாய் அருகில் உள்ள ஒரு சிறிய ஸ்டூலில் பூக்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்க, அந்தச் சிறுமியோ தரையில் அமர்ந்து புத்தகத்தில் மூழ்கியுள்ளார். சுற்றிலும் வாகனங்களின் சத்தம் மற்றும் போக்குவரத்து நெரிசல் என பல்வேறு இடையூறுகள் இருந்தபோதிலும், எதையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுமி தனது படிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்.
சந்தோஷ் என்ற சமூக வலைத்தளப் பயனர் இந்த நெகிழ்ச்சியான காட்சியைத் தனது கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். மாலை நேரம் கடந்து இருள் சூழத் தொடங்கிய பின்னரும் கூட, அந்தச் சிறுமி படிப்பதை நிறுத்தவில்லை. அருகில் இருந்த கடைகளில் இருந்து வந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி அவர் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார். போதிய வசதிகள் இல்லாத சூழலிலும், கல்வியின் மீது அந்தச் சிறுமி கொண்டுள்ள தீராத ஆர்வமும் அர்ப்பணிப்பும் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DZrWLvmTsOg/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்தச் சிறுமியின் விடாமுயற்சியைப் பாராட்டி வருகின்றனர். “மேஜை நாற்காலி போன்ற எந்தவொரு சொகுசு வசதிகளும் இல்லை, ஆனால் அவளிடம் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மட்டுமே உள்ளது” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனைத்து வசதிகளும் இருந்தும் படிக்கத் தயங்கும் குழந்தைகளுக்கு மத்தியில், மிகக் குறைந்த வாழ்வாதாரக் சூழலிலும் சாதிக்கத் துடிக்கும் இந்தச் சிறுமியின் கதை பலருக்கும் வாழ்க்கைப் பாடமாகவும் ஊக்கமாகவும் அமைந்துள்ளது.
