ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 19 வயது மாணவர் முரளி கிருஷ்ணா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் செய்த 50 ரூபாய் பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போது 9-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவர், பெற்றோரிடம் கூறினால் திட்டுவார்கள் என்ற பயத்தில் நீண்ட நாட்களாக இந்த ரகசியத்தை மறைத்து வந்துள்ளார்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முரளி கிருஷ்ணாவை, அவரது பெற்றோர் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், அவரது பெருங்குடலில் பேனா சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. பொதுவாக இத்தகைய சூழலில் அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றாலும், மருத்துவர்கள் ‘ரெட்ரோ கிரேட் என்டெரோஸ்கோபி’ (Retrograde Enteroscopy) எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சை இன்றியே அந்தப் பேனாவை வெற்றிகரமாக அகற்றினர்.
