சினிமாவில் நடக்கும் சம்பவங்கள், நிஜத்தில் நடப்பதை போலவே நிஜத்தில் நடந்த பல சம்பவங்கள் சினிமாக்களாக மாறி இருக்கின்றன. அப்படிபட்ட நிஜக்கதையாக தான் இதுவும் இருக்கிறது. நம்புவதற்கு ஆச்சரியம் என்றாலும், நடந்தது உண்மை சம்பவம்தான். அதாவது கே. பாக்யராஜ் இயக்கி, நடித்த படம் அந்த 7 நாட்கள். இதில் அம்பிகாவை, ராஜேஷ் திருமணம் செய்துகொள்வார். திருமணம் நடந்த இரவு அம்பிகா தற்கொலைக்கு முயற்சிப்பார். டாக்டரான ராஜேஷ் அவரை காப்பாற்றி விசாரிக்கும் போது, நான் ஒருவரை காதலித்தேன் என்று சொல்லும்போது, என் அம்மா இறக்கும் தருவாயில் இருக்கிறார். அவர் இறந்த பிறகு உன் காதலனுடன் உன்னை அனுப்பி வைக்கிறேன் என்பார். அந்த சம்பவம் நிஜத்தில் ஒரு பிரபல நடிகரின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.
இதுகுறித்து, சமீபத்திய பிரபல சினிமா இயக்குநர் பீம்சிங் மகன் இந்திரநாத் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சந்திரபாபு அந்த காலத்தில் மிகவும் வசதியாக, செல்வாக்காக வாழ்ந்த ஒரு நடிகர். அவரை போல யாரும் பந்தாவாக டிரஸ் செய்ய முடியாது. அங்கு வந்தால், இங்கு சென்ட் மணக்கும். அப்போதே உயர்தரமான காரில், கையில் சிகரட் டின்னுடன் பந்தாவாக எங்கள் வீட்டுக்கு வருவார். மிக ஆடம்பரமாக வாழ்ந்த மனிதர். சொந்தமான 3 படங்களை தயாரித்து, அதன்மூலம் நிறைய நஷ்டம் அடைந்துவிட்டார். புதிதாக கட்டிய வீட்டை கூட முழுமையாக கட்டி முடிக்க முடியாத அளவுக்கு கடைசியில் ஏழையாகி சாப்பாட்டு கூட வழியின்றி கஷ்டப்பட்டு இறந்து விட்டார்.
அவர் செல்வாக்கான நடிகராக இருந்த காலகட்டத்தில் சந்திரபாபு திருமணம் ஆடம்பரமாக நடந்தது. வசதியான குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தார். திருமணமான அன்று இரவு அவரது மனைவி சந்திரபாபுவிடம், நான் ஒருவரை மனப்பூர்வமாக காதலிக்கிறேன். அவருடன்தான் வாழ ஆசைப்படுகிறேன். ஆனால், என் வீட்டில் என்னை கட்டாயப்படுத்தி, எனக்கு இந்த திருமணத்தை செய்து வைத்து விட்டனர். இதில் எனக்கு சம்மதம் இல்லை, என கூறியிருக்கிறார். விடியும் வரை பொறுமையாக காத்திருந்த சந்திரபாபு, அடுத்த நாளே தன் மனைவியை அந்த காதலருடன் அனுப்பி வைத்துவிட்டார். அப்போதே அப்படி ஒரு முற்போக்கான முடிவை எடுத்த அவர், பிறகு திருமணம் செய்துகொள்ளவே இல்லை என்று கூறியிருக்கிறார்.