ஹைதராபாத்தைச் சேர்ந்த லாவண்யா வட்டனம் என்ற பணிபுரியும் தாய், தனது 7 வயது மகனுடன் நடத்திய உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் குறித்த காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருநாள் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது, அன்று மாலை வீடு திரும்பியதும் தன்னுடன் சேர்ந்து வாழ்த்து அட்டை செய்ய வேண்டும் என்று லாவண்யாவின் மகன் கேட்டுள்ளார். அதற்கு லாவண்யாவும் சம்மதித்துள்ளார், ஆனால் பெருநிறுவன வேலைப் பளு காரணமாக அவர் வீடு திரும்ப நள்ளிரவாகிவிட்டதால், அந்தச் சிறுவன் மிகுந்த ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் காணப்பட்டுள்ளான்.
தனது சோகத்திற்கான காரணத்தை தாய் கேட்டபோது, அந்தச் சிறுவன் “அம்மா, உங்களுக்கு எது மிகவும் முக்கியம்? நானா அல்லது உங்கள் அலுவலகமா?” என்று சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டு லாவண்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான். லாவண்யா உடனடியாகத் தன் மகனைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி, அவனே இந்த உலகில் மிக முக்கியமான நபர் என்று உறுதியளித்துள்ளார். அன்றிரவு சிறுவன் தூங்கிய பிறகும் இந்த எண்ணம் லாவண்யாவின் மனதை விட்டு அகலாததால், அவர் ஒரு புத்திசாலியான தாயாக இந்தச் சூழ்நிலையைக் கையாள முடிவு செய்தார்.
அதன்படி, லாவண்யா மீண்டும் தன் மகனுடன் அமர்ந்து, அலுவலக வேலை என்பது ஒரு பொறுப்பு என்றும், சில நேரங்களில் தாமதமாக வருவது வேலையின் ஒரு பகுதிதானே தவிர, அவன் மீதான அன்பு குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல என்றும் அவனுக்குப் புரிய வைத்துள்ளார். இந்த உணர்ச்சிப்பூர்வமான காணொளி வைரலானதைத் தொடர்ந்து, வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே தவிக்கும் பல பணிபுரியும் பெற்றோர்கள், தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் குற்ற உணர்வையும் வலியையும் கருத்துப் பகுதியில் பகிர்ந்து கொண்டு, லாவண்யா இந்த விவகாரத்தைக் கையாண்ட விதத்தைப் பாராட்டி வருகின்றனர்.
