சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா அல் ஹராம் மசூதியில், வாழ்க்கையில் விரக்தியடைந்த நபர் ஒருவர் மேல்தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படை வீரர் ஒருவர், அந்த நபர் தரையில் விழுவதற்குள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரைப் பிடித்துக் காப்பாற்றினார். இதனால் பாதுகாப்பு வீரரும் தற்கொலைக்கு முயன்ற நபரும் காயமடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பு வீரரின் இந்தச் சமயோசிதச் செயலைப் பாராட்டியுள்ள சவுதி உள்துறை அமைச்சகம், விபத்து குறித்து உரியச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய மசூதியின் தலைமை இமாம், புனிதத் தலங்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும், தற்கொலை போன்ற அழிவுப் பாதையை இஸ்லாம் ஆதரிப்பதில்லை என்றும் யாத்ரீகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
