எப்படி சார் அந்த வார்த்தைய பாட்டுல போட்டீங்க… வாலியிடம் வியந்து கேட்ட இயக்குனர் முருகதாஸ்!

By vinoth on பங்குனி 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார்.

   

அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். வாலியைப் பொறுத்தவரை திரையுலகில் அனைவருமே அவருக்கு நண்பர்கள்தான். சக பாடல் ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவருமே அவரிடம் அன்பாகப் பழகுவார்கள்.

   

அதே போல பாடல் எழுத போனால் சொன்ன நேரத்தில் கதைக்குப் பொருத்தமான பாடல்களை எழுதிக் கொடுப்பதிலும் வாலியை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. தீனா படத்தில் அஜித்தின் அறிமுகப் பாடலுக்கான சூழலை சொல்லியுள்ளார் இயக்குனர் முருகதாஸ். வாலியும் சொன்ன தேதியில் பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.

 

பாடல் வரிகளை படித்துப் பார்த்த இயக்குனர் முருகதாஸ், ஒன்றுமே சொல்லாமல் ஆச்சர்யத்தோடு வாலியைப் பார்த்துள்ளார். வாலி “நல்லா இருக்குன்னா, நல்லா இருக்குன்னு சொல்லு. இல்லன்னா பிடிக்கலன்னு சொல்லு. நான் வேற எழுதி தர்றேன்’ என சொல்லியுள்ளார். அதற்கு முருகதாஸ் ‘இல்ல சார் வத்திக்குச்சி பத்திக்காதுடான்னு எழுதிருக்கீங்க, படத்தில் அஜித் வாயில் வத்திக் குச்சி கடித்துக் கொண்டு நிறையக் காட்சிகளில் வருவார். அதற்கு இந்த வரிகள் அப்படியே பொருந்துது. அதுதான் எப்படி இந்த வார்த்தையை பாடலில் போட்டீர்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது” என சொன்னாராம்.