திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வேண்டுதலாகச் செலுத்தும் தலைமுடி, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யப்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாக மாறுகிறது. கோடை விடுமுறை போன்ற காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செலுத்தும் இந்த முடிகள் அனைத்தும் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு, மின்-ஏலம் மூலம் சர்வதேச நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. லண்டன், பாரிஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் நகரங்களில் இந்தியர்களின் அடர் கருப்பு மற்றும் பளபளப்பான தலைமுடிக்கு ‘திருப்பதி முடி’ என்ற பிராண்ட் பெயரில் மிக பலத்த வரவேற்பும் தேவையும் உள்ளது.
இங்கு சேகரிக்கப்படும் முடிகள் அனைத்தும் அலிபிரியில் உள்ள பிரத்யேக மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றின் நீளத்தின் அடிப்படையில் ஆறு வகைகளாகத் தரம் பிரிக்கப்படுகின்றன. 31 அங்குலத்திற்கும் மேல் நீளமுள்ள முடி முதல் வகை என்றும், 5 அங்குலத்திற்கும் குறைவான முடி ஐந்தாம் வகை என்றும், நரைமுடி ஆறாம் வகை என்றும் பிரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த முடிகள் உலகளவில் உயர்தர விக்குகள் மற்றும் ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தலைமுடி ஏலத்தில் அவற்றின் தரத்தைப் பொறுத்து விலையில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள முதல் தர முடி ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.72,802 வரை ஏலம் போகும் வேளையில், மிகக் குறைந்த நீளமுள்ள ஐந்தாம் தர முடி ஒரு கிலோ ரூ.135 என்ற விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்த முடி ஏலத்தின் மூலம் ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
