சென்னையை அடுத்த ஆவடி அருகே, கோழிக்குஞ்சு தகராறில் ஒருவரைக் கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆரிக்கம்பேடு பகுதியில் வசித்த சசிகுமார் என்பவரின் கோழிக்குஞ்சுகள், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது காம்பவுண்ட் சுவரைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் கல்லை தூக்கி எறிந்ததால் ஒரு கோழிக்குஞ்சு இறந்தது. இதனைச் சசிகுமார் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அன்பழகன் பலமாகத் தாக்கியதில் சசிகுமார் உயிரிழந்தார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஆவடி போலீசார் அன்பழகன் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்த நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்பழகனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவரது மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு சிறிய கோழிக்குஞ்சுக்காக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்து, ஒரு குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்ததோடு, குற்றவாளிக்குச் சிறைத் தண்டனையையும் பெற்றுத் தந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
