வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடந்த காலங்களில் பால், முட்டை வழங்குதல் மற்றும் அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளை மட்டுமே செய்து வந்துள்ளது. மக்கள் பிரச்சனைகளுக்காக அவர்கள் பெரிய அளவில் குரல் கொடுத்தது கிடையாது. விஜய்யின் ரசிகர்கள் பரவலாக இருந்தாலும், பிறந்தநாள் போன்ற கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்காதது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. வெறும் நலத்திட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலில் வென்றுவிடலாம் என்ற தவெகவின் கணக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
வில்லிவாக்கத்தில் திமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதோடு, களத்தில் மிக வலுவாக இயங்கி வருகிறது. குறிப்பாக, திமுகவின் கூ.பி.ஜெயின் தலைமையிலான திட்டமிட்ட செயல்பாடுகள் கட்சிக்கு வலு சேர்க்கின்றன. மேலும், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் கிளை அளவில் அமைப்பு ரீதியாக மிக வலுவாக உள்ளன. இந்த இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளின் போராட்டங்களும், மக்கள் ஆதரவும் தேர்தலின் போது அப்படியே திமுகவின் வாக்கு வங்கியாக மாறும் சூழல் நிலவுகிறது.
வில்லிவாக்கத்தில் இரண்டு முறை வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகரன் தற்போது தவெகவில் இருப்பதால், அவரது பழைய அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகள் ஆதவ் அர்ஜுனாவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்கு மீண்டும் வில்லிவாக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்த பிரபாகரனுக்கு ‘ஆயிரம் விளக்கு’ தொகுதி ஒதுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அந்த வாக்குகள் ஆதவ் அர்ஜுனாவுக்கு முழுமையாகச் சேருமா என்பதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.
வரலாற்று ரீதியாக திமுக அதிக முறையும், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சில முறையும் இங்கு வென்றுள்ளதால், வில்லிவாக்கம் தொகுதி எப்போதும் மதச்சார்பற்ற கூட்டணிக்கே சாதகமாக இருந்துள்ளது. தற்போதுள்ள சூழலில், ஆளுங்கட்சியின் அரசு திட்டங்கள் மற்றும் வலுவான கூட்டணி அமைப்புடன் மோத வேண்டிய நிலையில் ஆதவ் அர்ஜுனா உள்ளார். மக்கள் ஆதரவு யாருக்கு என்பது வரும் தேர்தலில் உறுதியாகும் என்றாலும், தற்போது திமுக கூட்டணியே முன்னிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
