லீவ் இன் ரிலேஷன்ஷிப் சமூக ரீதியாக முழுமையான அங்கீகாரத்தைப் பெறாமல் இருக்கலாம், ஆனால் அவை சட்டவிரோதமானவை அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பெண்கள், தங்கள் துணையுடன் “லிவ்-இன்” முறையில் வாழ்வதால் குடும்பத்தினரிடம் இருந்து உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனு தாக்கல் செய்திருந்தனர். சட்ட உதவியை நாடிய இந்த 12 ஜோடிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
வயது வந்த இரண்டு பேர் விருப்பத்தோடு ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழத் தேர்வுசெய்தால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ளது. இதை ஆதரிப்பத்ற்கு நீதிமன்றம் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 ஐக் குறிப்பிட்டது. இந்தச் சட்டமானது சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், வீட்டு உறவில் இருக்கும் பெண்களைப் பாதுகாக்கிறது.
