இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பறிபோன உயிர்… தவறான ஊசியால் துடிதுடித்த தாய்.. தனியார் மருத்துவமனையின் பகீர் அலட்சியம்..!!

By Soundarya on வைகாசி 1, 2026

Spread the love

டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி சர்மா என்ற தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினர், மருத்துவமனையின் அலட்சியத்தால் தங்கள் வீட்டின் மகாராணியை இழந்துவிட்டதாகக் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டுகின்றனர்.

குழந்தை பிறந்த பிறகு ஷிவாங்கிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பலமுறை தகவல் தெரிவித்தும் மருத்துவர்கள் உரிய நேரத்தில் கவனிக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும், அவருக்கு ஒரு தவறான ஊசி போடப்பட்டதாகவும், அதன் பின்னரே அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததாகவும் அவர்கள் பகீர் புகாரை முன்வைக்கின்றனர். தவறான ஊசி போடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஷிவாங்கியில் உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியதோடு, அவரது வாயிலிருந்து நுரை தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

   

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அவரை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற முயன்றபோது, ஆம்புலன்ஸ் வசதி செய்து தருவதில் மருத்துவமனை நிர்வாகம் காலதாமதம் செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இறுதியாக மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மருத்துவமனையின் இந்த அடுக்கடுக்கான மருத்துவ அலட்சியம் குறித்துப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.