கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஐயர் பாடி எஸ்டேட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு தமிழகம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோஜா வலி – ஷாஜிதா பேகம் தம்பதியினர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஐந்து வயது சிறுவனான சைபுல் ஆலம் தன்னுடைய அண்ணனுடன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் தேயிலை தோட்டத்தில் இருந்து வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை கவ்வி இழுத்துச் சென்றது. இதனை பார்த்த தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் சத்தம் போட்ட நிலையில் உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். சிறுவனை சிறுத்தை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மகனை சிறுத்தை கவி சென்றதை அறிந்த தம்பதியினர் கதறி அழுதனர்.
உடனே போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் வனப்பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் பின்புறம் சிறுவன் கழுத்தில் சிறுத்தை கடித்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தான். உடனே சிறுவனை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வால்பாறை பகுதியில் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
