ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் வாழும் ஒகுவோ கடாயாமா – யும்பி தம்பதியினர் ஒரே வீட்டில் வசத்தும், கடந்த 20 ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாமல் வாழ்ந்தது உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. மனைவி என்ன கேட்டாலும் தலையசைப்பது அல்லது இருமுவது மட்டுமே கணவரின் வழக்கமாக இருந்தது. பெற்றோர் நேருக்கு நேர் பேசிக்கொள்வதையே பார்த்திராத இவர்களது 18 வயது இளைய மகன், ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியைத் தொடர்புகொண்டு அவர்களைப் பேச வைக்குமாறு உதவி கோரினான்.
டிவி குழுவினர் இத்தம்பதியை அவர்கள் முதன்முதலில் சந்தித்த அதே பூங்காவிற்கு வரவழைத்தனர். இத்தனை ஆண்டுகள் பேசாததற்குக் காரணம் கேட்டபோது, “என் மனைவி குழந்தைகள் மீது மட்டுமே அதிக பாசம் காட்டினார்; அதனால் வந்த சின்னப் பொறாமையாலும் கோபத்தாலும் தான் பேசாமல் இருந்தேன்” என கணவர் ஒகுவோ கூறியது அனைவரையும் சிரிக்க வைத்தது. தொடர்ந்து, “இத்தனை வருஷமா குழந்தைகளை நல்லா பாத்துக்கிட்டாய், உனக்கு என் நன்றிகள்” என்று உருக்கமாகப் பேசி தனது 20 வருட மௌனத்தை உடைத்தார்.
பிள்ளைகள் மீது கொண்ட பொறாமையால் சொந்த மனைவியிடமே 20 ஆண்டுகள் வீம்பாகப் பேசாமல் இருந்த கணவரின் இந்தச் சம்பவம், பல வருடங்கள் கழித்தும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. வழக்கமாக மனைவிகள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே நிம்மதி அடையும் நம்மூர் ஆண்களுக்கு மத்தியில், மனைவியின் கவனத்திற்காகச் சொந்தக் குழந்தைகளிடமே போட்டி போட்ட இந்த ஜப்பானியக் கணவரின் செயல் ஆச்சரியத்தையும் புன்னகையையும் வரவழைக்கிறது.
