அசாம் மாநிலத்தில் காதலன் கண் முன்பே இளம் பெண் ஒருவரை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க அந்த இளம் பெண், தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, சில்சார் நகருக்கு அருகே காரை நிறுத்திவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
அந்த கும்பல் முதலில் காதலனைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு, அவர் கண் முன்னாலேயே அந்தப் பெண்ணை ஒருவருக்கு பின் ஒருவராகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த இளம்பெண் தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சியும், இரக்கமில்லாமல் அக்கூட்டம் இக்கொடூரத்தைச் செய்துள்ளது. அதோடு நில்லாமல், அவர்களது வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் 10 ஆயிரம் ரூபாயைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய சில்சார் நகரைச் சேர்ந்த நிலோத் பால் தாஸ் (25) மற்றும் சுபோல் தாஸ் (27) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் தாக்கிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காவல்துறையினர் தப்பியோடியவர்களை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
