ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா தேவி ஆகியோர் வசித்து வந்தனர். சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. கணவரைக் கொன்ற பிறகு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி விம்லா, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த மாலை வேளையில் சத்தம் கேட்டு மாடிக்குச் சென்ற வீட்டு உரிமையாளர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷின் உடல் உறுப்புகளை விம்லா ஒரு பையில் அடைக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரைப் பார்த்த பதற்றத்திலேயே விம்லா கீழே குதித்துள்ளார். ராஜேஷின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அவரது வயிற்றில் 35 செ.மீ அளவுக்கு ஆழமாக வெட்டப்பட்டிருந்ததும், வலது சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஒரு பகுதி காணாமல் போயிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெவ்வேறு அளவிலான மூன்று கத்திகளைக் கைப்பற்றியுள்ளனர்.
திருமணமாகி நீண்ட காலமாக குழந்தையில்லாத இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. மனைவி விம்லா மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், இந்தக் கொலைக்கு அதுதான் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விம்லாவிடம் இருந்து பெறப்படும் முழுமையான வாக்குமூலம் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான், இந்த அதிர்ச்சிகரமான கொலைக்கான உண்மையான பின்னணி தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
