காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய இருவரும் மதுப்பழக்கத்தால் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தநிலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள காரை ஊராட்சியில் அமைந்துள்ள சேமந்தாங்கள் ஏரிப் பகுதிக்குச் சென்று இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, யார் மது வாங்கித் தருவது மற்றும் யார் அதிக அளவு மது அருந்துவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இந்த வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அருள்மணி, மணிகண்டனை பலவந்தமாக இழுத்துச் சென்று ஏரிச் சேற்றில் அமுக்கியுள்ளார். இதனால் மணிகண்டன் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பன் இறந்ததை உணர்ந்த அருள்மணி பயத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மணிகண்டனின் சடலத்தைப் பார்த்து பொன்னேரிக்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த அருள்மணியைக் கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனே நண்பனைக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
