மும்பை மெரைன் லைன்ஸ் பகுதியிலுள்ள பிரின்சஸ் தெருவில், 4-வது மாடியிலிருந்து நாய் ஒன்று கீழே வீசப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. நாயை வீட்டை விட்டு வெளியேற்ற அழைக்கப்பட்ட டாக் டாக்ஸி வராததைத் தொடர்ந்து, இத்தகைய கொடூரச் செயல் அரங்கேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிரூபிக்கப்பட்டால், விலங்குகளுக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இச்சம்பவம் குறித்து மும்பை காவல்துறையும் விலங்கு நல அமைப்புகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றுவதுடன், பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். மேலும், டாக் டாக்ஸிக்கு அழைப்பு விடுத்த நபரை விசாரிப்பதன் மூலம் குற்றத்தில் தொடர்புடைய உண்மையான நபர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
விலங்குகளைக் கொடூரமாகக் துன்புறுத்துதல் மற்றும் கொல்வது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 325 மற்றும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11-ன் கீழ் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதன் மூலமே உயிரிழந்த அந்த நாய்க்கு உண்மையான நீதி கிடைக்கும்.
