மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண்ணான டிம்பிள், கடந்த வியாழக்கிழமை மாலை அவரது முன்னாள் காதலனான ஹர்விந்தர் மான் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பட்டியாலாவைச் சேர்ந்த டிம்பிள் மற்றும் ஹர்விந்தர் ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தில் ஒன்றாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் முன்பு காதல் உறவில் இருந்ததாகவும், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவிற்குப் பிறகு ஹர்விந்தர் மீண்டும் தனது காதலைப் புதுப்பிக்க முயன்று வந்த நிலையில், டிம்பிள் அவரிடமிருந்து விலகியே இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், வியாழக்கிழமை மாலை அலுவலகத்தில் டிம்பிள் பணியில் இருந்தபோது அங்கு சென்ற ஹர்விந்தர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.
டிம்பிளைத் தாக்கிய பின்னர் ஹர்விந்தர் அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டிம்பிள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற ஹர்விந்தர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஹர்விந்தரின் உடல்நிலை சீரானதும் அவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணையைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
