ஓசூர் அருகே உணவில் விஷம் கலந்திருந்ததால் 5 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கோழிப்பண்ணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (40) என்பவர் தனது குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ரிஸ்வான், அவரது மனைவி சல்மா (35), மகன்கள் கத்தூன் (17), சாஹில் (15) மற்றும் அவர்களின் 5 வயதுக் குழந்தை என அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியுள்ளனர்.
உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, அதில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதில் 5 வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்ற நான்கு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உணவில் விஷம் எப்படி கலந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
