சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ராஜேஸ்வரி, ஒரு விசித்திரமான மற்றும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது சாதாரண தோல் தடிப்பாகத் தொடங்கிய இந்தப் பிரச்சனை, நாளடைவில் உடல் முழுவதும் பரவி அவரது சதையைக் கல்லைப் போலக் கடினமாக மாற்றிவிட்டது. மரப்பட்டை போன்ற தோற்றத்துடன் உடல் உறுப்புகள் படிப்படியாகக் கல்லாக மாறுவதால், வலியாலும் மற்றவர்களைச் சந்திக்க முடியாமலும் அந்தச் சிறுமி கடும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் இது ‘இக்தியோசிஸ் ஹிஸ்ட்ரிக்ஸ்’ எனப்படும் மிகவும் அரிதான மரபணு நோய் என்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் ஒரு சிலரை மட்டுமே பாதித்துள்ள இந்த நோய்க்குத் தற்போது வரை நிரந்தரத் தீர்வோ அல்லது மருந்தோ இல்லை என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது மற்றவர்களுக்குப் பரவும் தொற்று நோய் அல்ல என்றாலும், பாதிப்பைக் குறைக்க தினசரி மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
