கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி தெருவில், முகமது அலி என்பவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்குப் பல்வேறு பழங்கால அபூர்வ பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அருங்காட்சியகத்தைத் திறக்க வந்த முகமது அலி, அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பித்தளைச் சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் காணாமல் போயிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருங்காட்சியகத்தின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, உள்ளே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 3 பெண்கள் இரவோடு இரவாக மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து பொருட்களைத் திருடிச் சென்றது அம்பலமானது.
இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அதிரடி விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அழகப்பபுரத்தைச் சேர்ந்த பகவதி (28), ஒழுகினசேரியைச் சேர்ந்த நந்தினி (22) மற்றும் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (24) ஆகிய 3 பெண் திருடர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
