சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த 58 வயதான அழகப்பன் சங்கரன் என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அதிகாரிகள் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அந்த சோதனையில் அவர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடமிருந்து ரூ.46.24 லட்சம் மதிப்பிலான 36.5 பவுன் தங்கக் கட்டியும் மற்றும் ரூ.7.48 லட்சம் மதிப்பிலான 6.5 பவுன் தங்க வளையலும் என மொத்தம் 43 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.53.72 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அழகப்பன் சங்கரனைக் கைது செய்தனர். மேலும், இந்தத் தங்கம் எங்கிருந்து பெறப்பட்டது மற்றும் யாருக்காகக் கடத்தி வரப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
