ஒடிசா மாநிலம் தேன்கனால் பகுதியைச் சேர்ந்த சனாதன் நாயக் (29) என்ற இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரெனக் காணாமல் போனார். அவரைத் தேடி வந்த குடும்பத்தினருக்கு, அருகிலுள்ள நெல் வயல்வெளியில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட செய்தி கிடைத்தது.
சடலத்தில் இருந்த ஆடைகளை வைத்து அது சனாதன் நாயக் தான் என அவரது பெற்றோர் தவறாக அடையாளம் காட்டி, சடலத்தைக் கைப்பற்றித் தகனம் செய்தனர். மேலும், சாங்கிய முறைப்படி 16-வது நாள் காரிய சடங்குகள் (சுத்திகரியா) வரை அனைத்தும் செய்து முடித்துத் துக்கத்தில் மூழ்கியிருந்தனர்.
இந்நிலையில், காணாமல்போய் ஒரு மாதத்திற்குப் பிறகு சனாதன் நாயக் திடீரென உயிருடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவரைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த குடும்பத்தினர் அவரைக் கண்ணீருடன் வரவேற்றனர். அப்படியென்றால் எரிக்கப்பட்ட சடலம் யாருடையது என்பது குறித்துப் பொலிஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
