தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை புக்யா கௌதமி என்பவர், அண்மையில் தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தனியார் பள்ளி ஒன்றை விளம்பரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டே, தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டதாக இவர் மீது கல்வித்துறை குற்றம் சாட்டியது. அரசு ஊழியராக இருந்து கொண்டு தனியார் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது விதிமீறல் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டை கௌதமி மறுத்துள்ளார். தான் அந்த ரீல்ஸ்களை பணி நேரத்திற்குப் பிறகும், தனது வீட்டிலும்தான் படமாக்கியதாகவும், பள்ளிப் பணியில் ஒருபோதும் அலட்சியம் காட்டியதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். போதிய ஆதரவு கிடைக்காத சூழ்நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
