ஹைதராபாத் சைதாபாத் காவல் எல்லைக்குட்பட்ட சிங்கரேணி காலனியில், 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் வெட்டும் கத்தியால் அந்த நபரைத் தாக்கியதில், அவருக்கு பலத்த குத்துக்காயங்கள் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு உண்டானது. இதைக் கண்ட உள்ளூர் மக்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த கொடூரத் தாக்குதல் முழுவதையும் அங்கிருந்த பாதசாரிகள் சிலர் தங்கள் கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிச்சலான தாக்குதல் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
https://twitter.com/nextminutenews7/status/2084582404371464234/video/1
இச்சம்பவம் குறித்து சைதாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலைக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளியைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
