கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பகுதியில் கடந்த ஜூலை 31 அன்று, பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் , 4 தனிப்படைகள் அமைத்துச் சுற்றியிருந்த 120-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராப் பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த பழனிமுத்து என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
உயிரிழந்த பெண் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதா என்பதும், அவருக்கும் பழனிமுத்துவிற்கும் இடையே 3 ஆண்டுகளாகக் காதல் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. சங்கீதாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஜூலை 27 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பழனிமுத்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது தந்தை குருநாதனின் உதவியோடு, உடலைப் போர்வையில் சுற்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்தது அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
