சென்னையில் மெரினா கடற்கரையில் இருந்து திருவொற்றியூர் நோக்கிச் சென்ற ‘6D’ மாநகரப் பேருந்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த நபர் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறிச் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், சற்றும் பதற்றமடையாமல் சக பயணிகளின் துணையோடு அந்த நபரைத் தட்டிக்கேட்டதுடன், அவர் பேருந்தில் இருந்து இறங்கித் தப்பிச் செல்லாதவாறு சுமார் 13 கிலோமீட்டர் தூரம் வரை டோல்கேட் நிறுத்தம் வரும் வரை மிகத் தைரியமாகப் பிடித்து வைத்துக்கொண்டார்.
இதனிடையே அப்பெண் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததால், டோல்கேட் பேருந்து நிலையத்தில் காவல்துறையினரும் நண்பர்களும் தயார் நிலையில் காத்திருந்தனர். பேருந்து வந்தடைந்ததும் அந்த நபர் உடனடியாகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் கைதானவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (43) என்பதும், அவர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. ஓடும் பேருந்தில் ஆபத்தான நிலையிலும் துணிச்சலாகச் செயல்பட்டுச் சீண்டலில் ஈடுபட்டவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்த அந்த இளம்பெண்ணின் சாதுரியமான செயலைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
