முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கட்டண தரிசனம், பொது தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வரிசையில் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அறிவிப்பின்படி ரூ.100 கட்டண தரிசனம் மாலை 6:30 மணி வரையிலும், பொது மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நாட்கள் மற்றும் தொலைதூரப் பயணங்களை முடித்துவிட்டு இரவு நேரங்களில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்களை இந்த திடீர் நேர மாற்றம் கடுமையாகப் பாதித்துள்ளது. இருப்பினும், முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் இந்த தரிசன நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என்று கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
