கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை நடுவழியில் தவிக்கவிட்டுச் சென்ற வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சில குற்றச்சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்களால் நகைச்சுவையாக முடிவதுண்டு. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, கோவையில் நடந்துள்ள இந்த ஆள் கடத்தல் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், காந்திபுரம் பகுதியில் பழைய கார் விற்பனை மையம் நடத்தி வருவதோடு, காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஃபார்ச்சூனர் காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மாருதி எர்டிகா காரில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது பெயரை உறுதி செய்துவிட்டு, கண் இமைக்கும் நேரத்திற்குள் அவரை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றது.
காரில் வைத்து தனசேகரன் தப்பிக்க முயன்றபோது, அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கியது. மேலும், “நீ உயிரோடு போக வேண்டும் என்றால் இரண்டு கோடி ரூபாய் தர வேண்டும்” எனப் பிரபல தமிழ் திரைப்படமான ‘உள்ளத்தை அள்ளித்தா’ பாணியில் மிரட்டிப் பேரம் பேசியுள்ளனர். அதிர்ச்சியடைந்த தனசேகரன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறவே, சந்தேகம் அடைந்த கடத்தல்காரர்கள் அவரது புகைப்படத்தை எடுத்து தங்களது தலைவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். அதைப்பார்த்த அந்த முக்கியப் புள்ளி, “நான் கடத்த சொன்ன ஆளே இவர் இல்லை, ஆளை மாற்றி கடத்திவிட்டீர்கள்” என்று கத்தியுள்ளார்.
ஆள் மாறியதை உணர்ந்த கடத்தல் கும்பல், தனசேகரனிடம் இருந்த செல்போன், சொகுசு காரின் சாவி மற்றும் அவரது புதிய வீட்டின் சாவி ஆகியவற்றை மட்டும் பறித்துக்கொண்டு, அவரை ஒரு காட்டுப்பகுதியில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இச்சம்பவத்தில் காயமடைந்த தனசேகரன் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம கும்பல் உண்மையாக யாரைக் கடத்த திட்டமிட்டிருந்தது, இதன் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் பண விவகாரங்கள் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
