மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி விஜயபாரதி கடந்த சில ஆண்டுகளாக இவரை பிரிந்து தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அறிவரசனின் கொழுந்தியா சிவரஞ்சனிக்கு திருமணமாகி கணவருடன் கோயம்புத்தூரில் வசித்து வந்துள்ளார். ஆனால், சிவரஞ்சனி வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அறிவரசனுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அறிவரசன், சிவரஞ்சனியை தொலைபேசியில் அழைத்து, தவறான பாதையில் செல்லாமல் கணவருடன் ஒழுங்காக வாழுமாறு கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.
இந்த கண்டிப்பால் கடுமையான கோபமடைந்த சிவரஞ்சனி, தன் கள்ளக்காதலனான சௌந்தர் என்பவரிடம் இதுகுறித்து கூறி புலம்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர், அறிவரசனை பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, நேற்று மாலை 5 மணி அளவில் ஒரு கருப்பு நிற பொலிரோ காரில் ஆயுதங்களுடன் மூன்று நபர்களை கூட்டிக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள அறிவரசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அச்சமயம் வீட்டில் அறிவரசனின் சிறு வயது மகன் மட்டுமே இருந்துள்ளான். சௌந்தர் அந்த சிறுவனிடம், “உங்க அப்பா எங்கேடா?” என்று மிரட்டலாகக் கேட்க, பயந்துபோன அந்த சிறுவன், “அப்பா பாத்ரூம் போயிருக்காங்க” என்று கூறியுள்ளான்.
உடனடியாக அந்த கும்பல் பாத்ரூம் கதவை அதிரடியாக உடைத்து, உள்ளே இருந்த அறிவரசனை வெளியே இழுத்து தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் அறிவரசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். தந்தையை வெட்டுவதைக் கண்டு அலறிய சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கவனித்த சௌந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் உடனடியாக காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அறிவரசனை மீட்ட உறவினர்கள், அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சித்ரகலா வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கள்ளக்காதலன் சௌந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறார்.
