வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், ‘தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை’ முழுவீச்சில் புதுப்பிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு 1,000 டன் தங்கத்தை ஈர்க்கும் பிரம்மாண்ட இலக்குடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், கடந்த பத்து ஆண்டுகளில் வெறும் 38 டன் தங்கம் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இத்திட்டம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததற்கு, தங்கம் சேகரிக்கும் மையங்கள் போதிய அளவில் இல்லாததே முக்கியக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, இந்த நிலையை மாற்றி திட்டத்தை எளிமையாக்கும் வகையில், இனி வங்கிகள் மட்டுமின்றி மக்கள் அன்றாடம் அணுகும் முன்னணி நகைக் கடைகளையும் தங்கம் சேகரிக்கும் அதிகாரப்பூர்வ மையங்களாக மாற்றி, இத்திட்டத்திற்குப் புதிய வடிவம் கொடுக்க அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
