அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்…. தவெகவின் ரகசிய ‘ஆபரேஷன் 2026’.. பின்னணியில் இருக்கும் அந்த ஒரு கணக்கு… தமிழக அரசியலை அதிரவைக்கும் ‘ஆள் தூக்கும்’ அரசியல்….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் ‘ஆள் தூக்கும்’ அரசியல் வியூகம் தான். குறிப்பாக, அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அளவிலான ஜாம்பவான்கள் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருவது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவளித்து அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தாலும், தவெகவின் இந்த அதிரடி நகர்வுகள் இன்னும் ஓயவில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா போன்ற செல்வாக்குமிக்க தலைவர்களின் இந்த இடப்பெயர்வு அதிமுகவின் அடிமட்டத்தையே அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது.

பாஜக அல்லது திமுக போன்ற கட்சிகளை விடுத்து, தவெக ஏன் அதிமுகவை மட்டுமே குறிவைக்கிறது என்ற கேள்விக்கு பின்னால் விஜய்யின் தீர்க்கமான அரசியல் கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்ட பிறகு உருவான திமுக-அதிமுக இருதுருவ அரசியலில், அதிமுகவின் இடத்தை தவெக நிரப்ப விரும்புகிறது. அதாவது, தமிழகத்தில் இனி அரசியல் போட்டி என்று இருந்தால் அது ‘திமுக Vs தவெக’ என்ற புள்ளியில்தான் அமைய வேண்டும் என்பதும், அதிமுகவை முழுமையாகப் பலவீனப்படுத்திவிட்டு அந்த பிரதான எதிர்க்கட்சி இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுமே விஜய்யின் நீண்ட காலத் திட்டமாகும்.

   

தற்போது விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே தவெகவின் மிகப்பெரிய பலமாக விளங்கி வருகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த வேண்டுமானால், மாவட்ட வாரியாக வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்களும், தேர்தல் அரசியலை நன்கு அறிந்த நிர்வாகிகளும் அவசியம் என்பதை விஜய் உணர்ந்துள்ளார். இதனால்தான், அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மற்றும் மக்கள் செல்வாக்குள்ள மாவட்டத் தலைவர்களைத் தன் பக்கம் இழுத்து, தவெகவின் கட்டமைப்பை மாநிலம் தழுவிய அளவில் அசுர வேகத்தில் விஜய் பலப்படுத்தி வருகிறார்.

   

தவெகவின் இந்த அதிரடி வியூகத்தால் தற்சமயம் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவது உண்மைதான் என்றாலும், அக்காட்சியை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதிமுகவின் தலைமை மீது தொண்டர்களுக்கு அதிருப்தி இருந்தாலும், ‘இரட்டை இலை’ என்ற மாபெரும் சின்னத்திற்கும், கட்சியின் கொள்கைகளுக்கும் தமிழகத்தில் இன்னும் தனித்துவமான வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது. கட்சித் தலைமை தங்களைச் சரிசெய்துகொண்டு, தொண்டர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் அதிமுக மீண்டும் தன் பழைய பலத்தைப் பெற வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் அதிமுக மீண்டெழுமா அல்லது விஜய்யின் இந்த சாணக்கிய வியூகம் வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.