தமிழக அரசியலில் தற்போது திரைமறைவில் அரங்கேறி வரும் அதிரடி சம்பவங்கள், மாநிலத்தின் அரசியல் களத்தையே முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிலும் இதேபோன்றதொரு ‘விக்கெட்’ சரிவு ஏற்படப் போகிறதோ என்ற பரபரப்பான விவாதம் எழுந்துள்ளது. அதிமுகவைப் போலவே திமுகவிலும் உட்கட்சி அதிருப்தி புகைந்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் மிகத் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த 4 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு ரகசியமாகச் சென்று வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. திமுகவில் தொடர்ந்து நீடித்தால் தங்களுக்கு இனிமேல் எந்தவிதமான அரசியல் எதிர்காலமும் இல்லை என்ற விரக்தியே இந்த மக்கள் பிரதிநிதிகளின் முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. வாரிசு அரசியல், மூத்த நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் தராமை மற்றும் தொகுதிகளில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களால் கோபமடைந்துள்ள இவர்கள், தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு தவெகதான் சரியான களம் என்று நம்புவதாகத் தெரிகிறது.
எந்த நேரத்திலும் இந்த 4 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையக்கூடும் என்ற செய்தி, திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது. உளவுத்துறை மூலம் இந்தத் தகவல் அறிவாலயத்தை எட்டியதை அடுத்து, கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் ஒருவித பலவீனம் ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் டாப் லெவல் தலைவர்களிடம் எழுந்துள்ளது. இதனால், அதிருப்தியில் உள்ள பிற எம்.எல்.ஏக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும், அவர்களைக் தீவிரமாகக் கண்காணிக்கும் வேலைகளிலும் திமுக தலைமை தற்பொழுது அவசரமாக இறங்கியுள்ளது.
மறுபுறம், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் இருந்து எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் பட்சத்தில், தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 முதல் 25 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் வர அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். மக்கள் மத்தியில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்த இடைத்தேர்தல் களம் ஒரு மிகப்பெரிய சாதகமான வாய்ப்பாக அமையக்கூடும். தவெக தலைவர் விஜய் மீதும், அவரது புதிய அரசியல் நகர்வுகள் மீதும் மக்கள் காட்டும் ஆர்வம், இந்தத் தொகுதிகளை தவெக அள்ளிக் குவிக்க வழிவகுத்து, தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
