தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த இந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. குறிப்பாக, இந்தத் தொகுதியில் நடிகை த்ரிஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தான் இங்கு போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், த்ரிஷாவிற்காகத்தான் லாரன்ஸ் இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கிறாரா என்ற கேள்வியும், விவாதமும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு, தான் ஏன் திருச்சி கிழக்கில் போட்டியிடவில்லை என்பதற்கான தார்மீக காரணத்தை விளக்கியுள்ளார். அவர் பேசுகையில், “நான் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று பலரும் ஆசையோடு அழைக்கிறார்கள், அவர்களுக்கு என் நன்றி. ஆனால் அரசியல் என்று வரும்போது ‘தர்மம்’ என்று ஒன்று இருக்கிறது. விஜய் சார் எப்போது ஹீரோவானாரோ, அப்போதிருந்தே அவருக்காக போஸ்டர் ஒட்டி, கட்சி தொடங்கியதில் இருந்து உழைத்த எத்தனையோ தொண்டர்கள் இருக்கிறார்கள். விஜய் சார் வீட்டில் இந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அந்த உண்மையான தொண்டர்கள் நிற்பது தர்மமா அல்லது நான் நிற்பது தர்மமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருவர் மரத்தை நட்டு வளர்த்து, அதில் வரும் பழத்தை நான் வந்து சாப்பிடுவது சரியாக இருக்காது. மரத்தை வளர்த்த தொண்டர்களே அதைச் சாப்பிடுவதுதான் முறை. ஒரு கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்றி, பிறகு கட்சியின் தலைமை பார்த்துப் பதவி கொடுப்பதுதான் சரியான அரசியல். நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே அரசியலுக்கு வர நினைக்கிறேன்; அவசரப்பட்டு எதையும் செய்யப் போவதில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தான் ‘தெருநாய்கள்’ குறித்துப் பேசிய வார்த்தை சர்ச்சையானதற்கும், தான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டதற்கும் இந்த வீடியோவில் அவர் விரிவான விளக்கமளித்துள்ளார்.
விஜய் ராஜினாமா செய்த தொகுதி என்பதால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு அனைத்துக் கட்சிகளுமே மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இங்கு பலமான வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து வரும் வேளையில், த்ரிஷா போட்டியிடுவதாக உலா வரும் செய்திகளுக்கு மத்தியில் லாரன்ஸ் விலகியிருப்பது கவனம் பெற்றுள்ளது. எனினும், லாரன்ஸ் தனது விளக்கத்தில் த்ரிஷா பற்றியோ அல்லது வேறு நபர்கள் பற்றியோ குறிப்பிடாமல், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் தான் விலகியதாகக் கூறியதன் மூலம், வதந்திகளுக்கு மிக நாகரீகமான முறையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
