அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், நேற்று அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த அதிரடி அரசியல் நகர்வைத் தொடர்ந்து, சென்னை மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் அவர் தவெகவில் இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்.
ஏற்கனவே சி. விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணைவது தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இந்த புதிய முடிவு குறித்துப் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், தவெகவில் இணைவது தனது பொதுவாழ்வுப் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் ஒரு மாற்றத்தின் புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். புதிய உத்வேகத்துடன் தனது அரசியல் பாதையைத் தொடரப்போவதாக அறிவித்துள்ள இவரது இந்த முடிவு, தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தவெகவை நோக்கி நகர்வது, வரவிருக்கும் அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
