விஷமிகள் அனுப்பும் ஒரு குறிப்பிட்ட கோப்பைத் திறந்தால், பயனர்களின் சாதனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் பறிபோகும் அபாயம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அந்த சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியத் தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்களால் மிக எளிதாகத் திருடப்படக்கூடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்த ஆபத்தான மால்வேர் தாக்குதலானது பிரத்யேகமாக விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் அல்லது வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா, மலேசியா, பிரேசில், மெக்சிகோ, சிங்கப்பூர், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பாதிப்பு பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதைச் பரப்புவதற்கு ஹேக்கர்கள் ஒரு தந்திரமான முறையைக் கையாள்கின்றனர். முதலில் ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் பயனரின் கணக்கை முழுமையாக முடக்கி, அதைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்கள். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட அந்த கணக்கின் மூலமாகவே அவர்களின் தொடர்பில் இருக்கும் மற்ற நண்பர்கள் மற்றும் குரூப்களுக்கு இந்த ஆபத்தான கோப்பை அனுப்பி மால்வேரைப் பரப்புகிறார்கள்.
