தமிழகமே அதிர்ச்சி…. ஆண்டுக்கு ரூ.200 கோடி அம்பேல்…. தமிழக ரேஷன் கடைகளில் நடக்கும் பகீர் கொள்ளை…. அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

By Nanthini on ஆனி 30, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்யும் ரேஷன் விநியோக அமைப்பில், சுமார் 200 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய எடைக் குறைப்பு முறைகேடு தற்பொழுது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 37,328 ரேஷன் கடைகள் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற பொருட்களைப் பெற்று பயனடைந்து வருகின்றன. கடைகளில் முறையான விநியோகத்திற்காக டிஜிட்டல் எடைக் கருவிகள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் (குடோன்களில்) நிலவும் முறையற்ற நடைமுறைகளால் இந்த ஒட்டுமொத்த அமைப்பிலும் தற்பொழுது ஓட்டை விழுந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பும்போது துல்லியமான எடை போடும் முறை எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஊழியர்கள் ஒரு மூட்டையின் எடையைத் தோராயமாக 50.65 கிலோ எனப் பதிவேடுகளில் குறித்துக்கொண்டு லாரிகளில் ஏற்றி அனுப்பிவிடுகின்றனர். ஆனால், இந்த மூட்டைகள் ரேஷன் கடைகளை வந்தடைந்த பின் கடை ஊழியர்கள் எடைபோட்டுப் பார்க்கும்போது, 50 கிலோவிற்குப் பதிலாக வெறும் 47 முதல் 48 கிலோ வரையிலான பொருட்கள் மட்டுமே இருக்கின்றன. லாரிகளில் கொண்டு வரப்படும்போது பொருட்கள் சிந்துவதாகவும், கடத்தப்படுவதாகவும் கூறப்படும் இந்த குளறுபடியால், அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

   

இந்த எடைக் குறைவுப் பிரச்சனை ரேஷன் கடை பணியாளர்களுக்கு மிகப்பாரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. குடோனிலிருந்து குறைவான எடையுடன் வரும் பொருட்களை வைத்துக்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்குத் துல்லியமான எடையில் பொருட்களை வழங்கும்போது கடைகளில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறையைச் சரிக்கட்ட, பொருட்கள் வாங்க வராத பொதுமக்களின் ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி, போலிப் பதிவுகள் மூலம் கணக்கை நேர் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஊழியர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த முறையற்ற செயல் தங்களை அறியாமலேயே தப்பு செய்ய வைப்பதாகக் கடை பணியாளர்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

   

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் பொருட்களை லாரிகளில் ஏற்றும்போதே ஒவ்வொரு மூட்டையையும் துல்லியமாகக் கணக்கிடும் டிஜிட்டல் எடைத் தராசுகளை அரசு நிறுவ வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிடங்கிற்குச் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும் இந்த டிஜிட்டல் முறையை அமல்படுத்தினால், விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன் 200 கோடி ரூபாய் மக்கள் பணமும் வீணாகாமல் தடுக்கப்படும். இ விவகாரம் குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தைக் காக்க அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.