சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது ஒரே மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அம்பேத்கர் அவாஸ் காலனியில் வசித்து வந்த புருஷோத்தம் படேல் (38) மற்றும் அவரது மகன் ராஜ்பீர் படேல் (19) ஆகியோர், கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு வழக்கம்போல தங்களது அறையில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கியுள்ளனர். அதிகாலை சுமார் 4:30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏசி கம்ப்ரெஸர் வெடித்ததில், அறையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கும் தீ பரவி, வீடு முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்தது. இதனால் தப்பிக்க வழியின்றி இருவரும் அறைக்குள்ளேயே மயக்கமடைந்தனர்.
பயங்கர சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அண்டை வீட்டார், உடனடியாக ‘டயல் 112’ அவசர சேவைக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் கதவை உடைத்து மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு புருஷோத்தம் படேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். புகையினால் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவரது மகன் ராஜ்பீர் படேல், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட தடயவியல் சோதனையில் ஏசி கம்ப்ரெஸர் வெடித்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
