மாரத்தானில் பங்கேற்று வெயில் காரணமாக மயக்கமடைந்த சிறுமிகளுக்குத் தாம் மனிதாபிமான அடிப்படையில் முதலுதவி செய்ததை, திமுக ஐடி விங்கில் அநாகரீகமாக விமர்சித்துப் பதிவு வெளியிட்ட தவெக அரசின் உயர்கல்வி துணை அமைச்சர் விஸ்வநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுமிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்க உதவிய மனிதாபிமானச் செயலை இழிவுபடுத்துவது மிக மோசமான அநாகரீகச் செயல் என அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, குறிப்பாகத் தலித் சமூகத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கும் தம்மைக் குறிவைத்து இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுவதாக விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார். அன்பில் மகேஷ் அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல்கள், தனியார் பள்ளிக் கூட்டமைப்பின் தலைவர் அளித்த பேட்டியின் மூலம் ஏற்கனவே உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற தரம்தாழ்ந்த விமர்சனங்களால் அன்பில் மகேஷ் தனது சொந்தத் தரத்தைத் தான் குறைத்துக் கொள்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
இத்தகைய மட்டமான விமர்சனங்கள் மூலமாகத் தங்களை என்றும் வெல்ல முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ள துணை அமைச்சர் விஸ்வநாதன், தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளை முன்வைத்தால் அதற்குரிய கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
